கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் அஜி குமார். வீடு கட்ட வங்கியில் ரூ.11 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கொரோனா பிரச்னையால் அஜி குமார் வேலை இழந்ததால் கடனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆனால், கடந்த மார்ச் மாதம் ரூ.1.5 லட்சத்தை வங்கியில் செலுத்தியதாக உறவினர்கள் கூறுகின்றனர். நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பியது.
பின்னர் வங்கி அதிகாரிகள் நேற்று மதியம் வீட்டிற்கு வந்து நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அஜிகுமார் மகள் அபிராமி (20) கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தபோது நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரமாகியும் அபிராமி கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அபிராமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அபிராமியின் மரணத்திற்கு வங்கி அதிகாரிகளே காரணம் என உறவினர்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.