நிலக்கோட்டை: தகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண்ணை கொன்று பல்லடத்தில் இருந்து கொடை ரோடு வரை காரில் சடலத்தை எடுத்து வந்து நெடுஞ்சாலையோரம் புதைக்க முயன்ற காதலன் மற்றும் அவரது உறவினரை ரோந்து சென்று போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்தவர் அருண் ஸ்டாலின் விஜய் (32). இவரது மனைவி பிரின்சி (27). இருவரும் மில் தொழிலாளிகள். 6 வயதில் மகன் உள்ளார். பிரின்சி பணிபுரியும் மில்லில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்த திவாகர் (24) பணி புரிந்து வந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
பிரின்சி, திவாகர் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவந்ததும் திவாகரை, அவரது மனைவி கண்டித்தார். இதனால் பிரின்சியுடனான தொடர்பை திவாகர் துண்டித்தார்.
தன்னுடன் பழகியதை வைத்து மிரட்டி திவாகரிடம் பணம், நகை கேட்டு பிரின்சி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த திவாகர், பிரின்சியை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக முதுகுளத்தூரை சேர்ந்த தனது உறவினர் இந்திரகுமாரை (31) தொடர்புகொண்டு பல்லடத்திற்கு கார் எடுத்து வருமாறு கூறினார். அதன்படி இந்திரகுமார் காருடன் வந்தார்.
இதையடுத்து திவாகர், இந்திரகுமார் இருவரும், பிரின்சியை செல்போனில் தொடர்புகொண்டு நேரில் வருமாறு அழைத்தனர். நேற்றுமுன்தினம் காலை அங்குவந்த பிரின்சியிடம், காரில் பரிசுப்பொருட்கள் வைத்திருப்பதாகவும், இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாகவும் ஆசை வார்த்தை கூறி கண்ணை மூடுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து கண்ணை மூடியபடி காருக்குள் செல்ல முயன்ற பிரின்சியின் கழுத்தை, நைலான் கயிற்றால் நெரித்து கொலை செய்து உடலை இருவரும் வேனில் மறைத்து வைத்தனர். தொடர்ந்து முதுகுளத்தூருக்கு புறப்பட்டனர். காரை இந்திரகுமார் ஓட்டி சென்றார்.
திவாகர் பைக்கில் பின்தொடர்ந்து சென்றார். திண்டுக்கல் மாவட்ட எல்லையான கொடைரோடு அடுத்த பள்ளபட்டி பிரிவு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் சடலத்தை புதைக்க திட்டமிட்டு காரை சாலையோரத்தில் நிறுத்தினர்.
அப்போது, அந்த வழியாக வந்த மதுரை மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார், நள்ளிரவில் கார், பைக் நிற்பதைப் பார்த்து சந்தேகமடைந்தனர். அங்கு நின்றிருந்த திவாகர், இந்திரகுமாரிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனையிட்டபோது பிரின்சியின் உடல், அருகே மண்வெட்டி, கடப்பாரை ஆகியவை இருந்தன. விசாரணையில் இருவரும் பிரின்சியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
அம்மையநாயக்கனூர் போலீசார், பிரின்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திவாகர், இந்திரகுமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார், பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.