தாயும், மகளும் 12ம் வகுப்பில் தேர்ச்சி இருவரும் ஒரே கல்லூரியில் சேர முடிவு!!

86

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மே 5ம் தேதி வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்தனர்.

நெமிலி அருகே பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற தாய், மகள் இருவரும் கல்லூரியில் சேர முடிவு செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரும்புலிம்பாக்கத்தில் வசித்து வருபவர் 49 வயது சுந்தரமூர்த்தி. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார்.

இவரது மனைவி 35 வயது நாகவேணி. இவர்களின் மகள் பத்மலோசினி. இவர் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை தாய், மகள் இருவரும் எழுதினர். நாகவேணி தனித்தேர்வராக தேர்வு எழுதிய நிலையில் பத்மலோசினி 511 மதிப்பெண் பெற்றும், தாய் நாகவேணி 386 மதிப்பெண்கள் பெற்றும் தேர்ச்சி பெற்றனர். இதுகுறித்து மாணவி பத்மலோசினி எனது அம்மா 2002ல் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொண்டு படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நான் 11ம் வகுப்பு படிக்கும்போது எனது தாயும் 11ம் வகுப்பு படிக்கலாம் என முடிவு செய்தார்.

இதனால் தனித்தேர்வு மையம் மூலம் பதிவு செய்து எனக்கு பள்ளியில் கற்பிக்கும் பாடங்களை எனது தாய்க்கும் வீட்டில் தினமும் நான் கற்றுக்கொடுப்பேன். கடந்த ஆண்டு 11ம் வகுப்பு தேர்வு எழுதியதில் எனது அம்மா 372 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அதே போல் இருவரும் பிளஸ் 2 தேர்வு எழுதினோம். இதில் நான் 600க்கு 511 மதிப்பெண்ணும், எனது அம்மா 386 மதிப்பெண் பெற்றுள்ளார். நாங்கள் இருவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளோம். நான் படிக்கும் கல்லூரியில் எனது தாயும் விண்ணப்பித்துள்ளார் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தாயும் மகளும் ஒன்றாக பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஒன்றாக கல்லூரிக்கு செல்ல இருப்பதை அப்பகுதிமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இருவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் சமூக வலைதளங்களில் குவிகின்றன.

Previous articleமனைவி நடத்தையில் சந்தேகம்… 2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை!!
Next articleஅம்மாவும், மகனும் 10 ம் வகுப்பில் ஒன்றாக படித்து தேர்ச்சி… சுவாரஸ்ய சம்பவம்!!