கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்… போலீஸ் ஸ்டேஷன் வாசலில் கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!!

154

காதலித்து, தனிமையில் அவ்வப்போது சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், கர்ப்பமாக்கிய காதலன், குழந்தைப் பிறந்ததும் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்த நிலையில், கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தின் வாசலில் இளம்பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிப்பிரியா (20). ஹரிப்பிரியாவின் தாய் சிறு வயதிலேயே இறந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தந்தையும் இறந்துவிட்டார்.

தனது பெரியப்பா பாஸ்கரன் ஆதரவில் ஹரிப்பிரியா இருந்து வந்த நிலையில், பக்கத்து கிராமமான வலசேரிக்காட்டைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் ஹரிப்பிரியாவுக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில் ஹரிப்ரியா கர்ப்பமடைந்துள்ளார். தான் கர்ப்பமடைந்துள்ள தகவலை பிரகாஷிடம் தெரியப்படுத்தியது ஹரிபிரியாவுடன் பழகுவதை பிரகாஷ் தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 22ம் தேதி ஹரிப்பிரியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

தனக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை பிரகாஷிடம் தெரியப்படுத்தியது, இது தனக்கு பிறந்தது அல்ல எனக் கூறி பிரகாஷ் ஹரிப்பிரியாவை விட்டு முழுமையாக விலகியிருக்கிறார். இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் ஹரிப்பிரியா புகார் அளித்திருந்தார்.

ஹரிப்பிரியாவின் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டிஎன்ஏ டெஸ்டில் ஹரிப்பிரியாவுக்கு பிறந்த குழந்தையின் டிஎன்ஏவும், பிரகாஷின் டிஎன்ஏவும் ஒத்துப் போனது.

இதையடுத்து போலீசார் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பிரகாஷ், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதாக ஹரிப்பிரியாவுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து இன்று பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற ஹரிப்பிரியா, தனது கைக்குழந்தையுடன் திடீரென காவல் நிலையத்தின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.இது குறித்த தகவல் அறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஹரிப்பிரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரகாஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனது போராட்டத்தை ஹரிப்பிரியா கைவிட்டார். திடீரென காவல் நிலையத்தின் வாசலில் இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous articleஓரிரு நாட்களில் திருமணம்.. காதலரை கரம் பிடிக்க எஸ்கேப் ஆன இளம்பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Next articleமாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!!