அடுத்த வாரம் கல்யாணம் சொந்தபந்தமெல்லாம் வந்தாச்சு.. காதலனை திருமணம் செய்து காவல் நிலையத்தில் புகாரளித்த கல்லூரி மாணவி!!

154

அடுத்த வாரம் திருமணம். பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுத்து, சொந்த பந்தமெல்லாம் வீட்டிற்கும் வர துவங்கி விட்டனர். முகூர்த்தப் புடவை எல்லாம் எடுத்து, மண்டபத்திற்கு அட்வான்ஸ் பணம் கொடுத்து, மகளின் கல்யாணம் குறித்த கனவுகளுடன் இருந்த பெற்றோர், காவல் நிலையத்தில் இருந்து வந்த தகவலால் அதிர்ந்து போனார்கள்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அதே பகுதியில் சிப்ஸ் கடை ஒன்றை தனியே நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜோதிபிரியா (22) தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரும், மாட்லாம்பட்டியை சேர்ந்த துணி வியாபாரியான செல்வகுமார் (24) என்ற இளைஞரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

ஆனால், ஜோதிபிரியாவை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஜோதிபிரியா குடும்பத்தினர் முடிவு செய்தனர். அடுத்த இரண்டு வாரங்களில் திருமணம் நடைபெற இருந்ததால், இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தனர். இதற்கிடையே கடந்த 23ம் தேதி காலை மருதாணி வாங்க கடைக்கு செல்வதாக கூறி சென்ற ஜோதிபிரியா அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

நீண்ட நேரமாகியும் மகள் கடையில் இருந்து திரும்பி வராததால், தந்தை செல்வக்குமார் நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடி, மகளைக் கண்டுபிடித்து தரகோரி காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் ஜோதிபிரியா தனது காதல் கணவர் செல்வகுமாருடன் காரிமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். பெற்றோர் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பிடிக்கவில்லை என்றும், மருதமலை முருகன் கோவிலில் காதலன் செல்வகுமாரை திருமணம் செய்து கொண்டதாகவும், செல்வகுமாருடன் தான் வாழப் போவதாகவும், உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஜோதிப்ரியா புகார் அளித்துள்ளார்.

அதன்பின் இருவரது பெற்றோரையும் வரவழைத்து சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி ஜோதிப்ரியாவை அவரது காதல் கணவர் செல்வகுமாருடன் போலீசார் பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதே சமயம், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டார், பெண்ணின் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleநீச்சல் கற்றுக்கொடுத்த போது சோகம்.. தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!!
Next articleரூ.99 ஆஃபரில் கொண்டாட போன புதுமண ஜோடி தீயில் கருகி பலியான கொடுமை!!