தாய்மாமன் இறந்ததை கேட்டதும் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

93

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூர் ரோடு கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வி. அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். மனநலம் குன்றியவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

இவரது மகள் சுபஸ்ரீ (வயது 20). இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெள்ளாறு பாலம் அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். செல்வியின் தம்பியான முத்துக்குமார் (27) இவர் தனது அக்கா வீட்டில் தங்கி திருச்சியில் உள்ள நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சுபஸ்ரீயும் அவரது தாய் மாமன் முத்துக்குமாரும் காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது . இதனிடையே, சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முத்துக்குமார் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று மதியம் அக்கா வீட்டில் முத்துக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீடு திரும்பிய செல்வி, தனது தம்பி பிணமாக தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி துடித்தார். இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே முத்துக்குமாரின் மரணம் குறித்து நர்சிங் கல்லூரி விடுதியில் படித்து வந்த சுபஸ்ரீக்கு தகவல் தெரிவித்து உறவினர்கள் அவரை அழைத்து வர சென்றனர். அங்கு முத்துக்குமார் இறந்ததை அவரது சித்தி மகள் சுபஸ்ரீயிடம் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுபஸ்ரீ கல்லூரி அறைக்குள் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த விடுதி வார்டன் அறைக் கதவைத் தட்டினார். நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. உடனே அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்குள்ள மின்விசிறியில் சுபஸ்ரீ தூக்குப்போட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நமணசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வெவ்வேறு இடங்களில் காதலனும், காதலியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசந்தேகத்தால் விபரீதம் 4 மாதக் குழந்தையை அடித்தே கொலை செய்த தாய், தந்தை!!
Next article5 வயது குழந்தையை தவிக்கவிட்டு காதலனுடன் தற்கொலை செய்த இளம்பெண்… வாட்ஸ் அப் மெசேஜால் பரபரப்பு!!